Wednesday, 13 May 2020

பிரிவு

ஒற்றை நரம்பை மட்டும்

பற்றி இழுத்து

உருவி எடுப்பதுபோல்

தோன்றும்

பிரிய உறவின்

பிரிவின் வலியை

வெளிப்படுத்த கூடாதென

விழிகளை

மேலும் கீழும் உருட்டி

கண்ணீர்த்துளிகளை

உள்ளிழுத்து

துடிக்கும் உதட்டை

இழுத்து பிடித்து

வலிகள் மறைத்து

புன்னகை புரிந்து

நிற்பதுவும்

வாழ்க்கை கற்றுத்தந்த

சவாலான பக்குவமே...



சில மணிகளோ

சில நாட்களோ

சில வருடங்களோ

இல்லை

ஆயுளுக்கும் நிரந்தரமோ..

பிரிவு என்பது

எப்பொழுதும்

வலிகள் மட்டுமே தரும்

வரம் தான்..



ஏற்றுக் கொள்ளத்தான்

வேண்டுமென

எத்தனைவிதமாகவோ

தனக்குதானே

உணர்த்தினாலும்...

எதிலெதிலோ

மனதை செலுத்தி

வாழ்க்கை பயணத்தை

தொடர்ந்தாலும்



மழை துளியின்

குளிர் ஸ்பரிசமாய்

கோடையின்

சுடும் வெயிலாய்

ஒரு தாக்கம்

ஊசலாடவே செய்கிறது

பிரிவை சுமக்கும்

பாழும் மனதில் ..



ஆறடி குழிக்குள்

அடக்கம் பண்ணிய

பின்பாவது அடங்குமா

இந்த பிரிவின் வலி!!