கருகருவென மேகங்கள் கூடி
வெகுநேரம்
ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த
மழை
ஒருவழியாய் சரசரவென
பெய்யத் தொடங்கியது..
கையில் அகப்பட்ட
வண்ண நெகிழி குடங்களைப்
பற்றிக் கொண்டே
இடி மின்னலை
பொருட்படுத்தாது
வீதி விரையும்
அக்காவிற்கு
ரசிக்கத் தெரியாது
மழையின் வேகத்தை!!
புழக்கடை தரையில்
ஒட்டிப்போய் கிடந்த
புழுதியை
ஈக்குமாறினால்
பரபரவென தேய்த்து
கழுவும் அம்மாவும்
ரசித்ததில்லை
பெரு மழையின் அழகை!!
நெற்றியில் உருளும்
துளிகளை
துடைக்காமல்
இருசக்கர வாகனத்தை
வீதியில் நிறுத்தியபடி
இரும்புக் கம்பிகளை
சொட்டசொட்ட நனைந்த
பழைய துண்டினால்
துடைக்கும் அப்பாவும்
ரசிப்பதில்லை
அம்மழையின் தன்மையை..
கட்டிவைத்திருந்த
மண் வீடு கரைந்து விடாமல்
பாவாடை கொண்டு
மறைத்தபடி நிற்கும்
தங்கையும் ரசிப்பதில்லை
அடித்து பெய்யும் மழையின் பெருந்துளிகளை..
ரசிப்பவர்கள் ரசித்துக் கொண்டிருங்கள்..
ரசனைக்கும் மீறின இயல்பிலேயே
நாங்கள் கடத்திக் கொள்கிறோம்
இவ்வாழ்வை !!
மழை..
எங்களுக்கு மாபெரும்
வாழ்வாதாரம்!!