கத்தரிக்காவை
அரிந்து கொண்டே
நாலு வீட்டு கதைசொல்லும்
நாத்தனார்
யத்தே ...
அந்த சறுவ சட்டியை
கொண்டாங்க மினுக்கனும்
என்றபடியே
ம்ம் கொட்டும் ஓரகத்தி
அவ்வப்பொழுது
பசிக்குது என
தட்டை தூக்கி வரும்
கடைக்குட்டியின் வாரிசு
சிக்கெடுத்து
நான் தலை வாரிவிடவா
என பட்டைச் சீப்போடு
பக்கத்தில் வரும் அக்கா மகள்
ரம்மி விளையாடுகையில்
ரகசியமாய் ஜோக்கரைத்
தரும் சித்தப்பா
வீட்டிற்கும் கடைக்குமாய்
பேத்தியின் விரல்பற்றி
சலிக்காமல்
அலையும் பெரியவர்
பலவித உறவுகளின்
பலவித உரிமைகளும்
பலவித உணர்வுகளுமாய்..
தனியாய் ஆக்கித் தின்னும்
குண்டான் சோற்றில்
ஒருபொழுதும் கிடைப்பதில்லை
இப்பண்டிகை நாட்களின்
குதூகல ருசி!