பரபரவென அடித்து
கூந்தலைக் கலைத்து
முகத்தில் பரப்பிவிட்டுச்
செல்லும் காற்று
விரல்களும் பாதங்களும்
தனையறியாமலே
தாளம்போட வைக்கும்
ஸ்பீக்கரில் கசியும் பாடல்கள்
முன்பின் அறியாத மழலை
தாயின் தோளிலிருந்து
எட்டிப்பார்த்துச்
சிரிக்கும் சிநேகப் புன்னகை
அருகிலிருக்கும் ஊர்க்காரரோடு
சப்தமாய் பேசும்
கொண்டைமுடிந்த ஆச்சி
கூடையிலிருக்கும் வெள்ளரிக்காவை
விற்றுவிட வேண்டுமென
கூவிக் கொண்டே ஏறியிறங்கும்
பேருந்து நிறுத்த வியாபாரி
என பலவித காட்சிகள்
கொஞ்சம் கொஞ்சமாக
மனதை இலகுவாக்கியபடியே..
எத்தனையோவித குரல்கள்
எத்தனையோவித சப்தங்கள்..
எத்தனையோவித முகபாவங்களோடு மனிதர்கள்
எத்தனையோவித நிறுத்தங்கள்..
எல்லாவற்றையும்
நினைவடுக்கின் அடிப்பேழையிலிருந்து
மென்மையாக
புரட்டிக் கொண்டிருக்கிறேன்..
பூட்டப்பட்ட ஏசி காருக்குள்
இருவர் மட்டும்
மௌனமாய் பயணித்த
ஒரு பயணப்பொழுதில்.. 💕
இதே நிகழ்வுதனை குடும்ப வாழ்வில் பொருத்தி தனிக்குடித்தனமாக ஆனதையும் சொல்லலாம் தங்கை மிகவும் அருமை
ReplyDelete