Monday, 15 March 2021

மருதாணி திருவிழா

 ஐப்பசி மாசத்துல

அப்பி பிடிக்கும் என்ற

அப்பத்தாவின் வார்த்தைகள்

மனதில் எதிரொலியாய்


வாய்ல வச்சா

விசமாம்டி என்று

தோழிகளோடு

அளவாடியபடியே

அம்மியில் அரைபட்டது 

இலைகளோடு

கொட்டைபாக்கும் புளியும்


அவசரகதியில் முடிக்கப்பட்ட

இரவு உணவில் பசி மறைய


முற்றத்தில் அமர்ந்தபடியே

வரிசையாக

நீட்டப்பட்ட கரங்களில்

அம்மா வார்த்தாள்

குட்டி மருதாணி தோசை 


எப்பொழுது விடியும்

என எதிர்பார்ப்போடு

எப்பொழுது தூங்கினோம் 

என அறியாத

இரவின் முடிவில்


தலையணையில்

கொஞ்சம்

தலையில்

கொஞ்சம்

தள்ளியிருந்த தங்கையின்மேல்

கொஞ்சம் போக

மீதியிருந்த காய்ந்த மருதாணி

சிவப்பேறிய கரங்களில்

பார்த்ததுமே 

அப்படியொரு பரவசமும்


அவளைவிட எனக்கு தான்

செவந்திருக்கு

என மனதில் பெருமிதமாய்...


இப்படியாக

அரங்கேறியது

ஒரு மருதாணி திருவிழா 💕




3 comments: