Wednesday, 18 August 2021

சின்னஞ்சிறு விசித்திர உலகம்

 அவதார் உலகத்தையும் விட

விசித்திர அழகானது

மழலைகளின் உலகம்..


நடு ராத்திரியில்

கால் மிகவும் சுடுகிறது 


காய்ந்து போன காயத் தடம்

பார்க்கும் பொழுதெல்லாம் வலிக்கின்றது 


தினமும் ஒரு

நிலா தோசை வருகின்றது


அதிகாலைச் சூரியன் 

ஆரஞ்சு பழமாகிறது 


சாலையில் செல்பவர்களில் பலர் 

பூச்சாண்டி ஆகிவிடுகிறார்கள்


நோட்டை விட சில்லறைக்கு

மதிப்பு அதிகம் 


நேத்திக்கு வரேன் என காலங்களை 

குழப்பிவிடுவது..


இப்படி இப்படியாக ...

இன்னும் இன்னுமாக...


தெரிந்தால் சொல்லுங்களேன்..


யாரிடம் மனு கொடுக்க வேண்டும்..


இந்த விசித்திர உலகத்தில் 

சின்னஞ்சிறு இடத்தில் 

வசிக்கும் குடியுரிமை

பெற்றுச் செல்ல 😍😍




Tuesday, 22 June 2021

மழை எனும் வாழ்வாதாரம்

 கருகருவென மேகங்கள் கூடி  

வெகுநேரம்

ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த

மழை 

ஒருவழியாய் சரசரவென

பெய்யத் தொடங்கியது..


கையில் அகப்பட்ட

வண்ண நெகிழி குடங்களைப்

பற்றிக் கொண்டே

இடி மின்னலை

பொருட்படுத்தாது

வீதி விரையும் 

அக்காவிற்கு 

ரசிக்கத் தெரியாது

மழையின் வேகத்தை!!


புழக்கடை தரையில் 

ஒட்டிப்போய் கிடந்த

புழுதியை

ஈக்குமாறினால்

பரபரவென தேய்த்து 

கழுவும் அம்மாவும்

ரசித்ததில்லை

பெரு மழையின் அழகை!!


நெற்றியில் உருளும்

துளிகளை 

துடைக்காமல்

இருசக்கர வாகனத்தை

வீதியில் நிறுத்தியபடி

இரும்புக் கம்பிகளை 

சொட்டசொட்ட நனைந்த

பழைய துண்டினால்

துடைக்கும் அப்பாவும்

ரசிப்பதில்லை

அம்மழையின் தன்மையை..


கட்டிவைத்திருந்த

மண் வீடு கரைந்து விடாமல்

பாவாடை கொண்டு 

மறைத்தபடி நிற்கும்

தங்கையும் ரசிப்பதில்லை

அடித்து பெய்யும் மழையின் பெருந்துளிகளை..


ரசிப்பவர்கள் ரசித்துக் கொண்டிருங்கள்..


ரசனைக்கும் மீறின இயல்பிலேயே

நாங்கள் கடத்திக் கொள்கிறோம்

இவ்வாழ்வை !! 


மழை..


எங்களுக்கு மாபெரும்

வாழ்வாதாரம்!!




Tuesday, 23 March 2021

மகள் என்னும் தேவதை

அவளிடமிருந்து 

ஒற்றை முத்தம் 

பெறுதல் 

அவ்வளவு எளிதல்ல..


எவ்வித கெஞ்சலுக்கும்

எத்தனைவித கொஞ்சலுக்கும்

மிட்டாய் லஞ்சத்திற்கும்

சற்றும் மசிய மாட்டாள்


ஆனால்..


சட்டென்று

பெருந்தூரலாய்

நிலத்தில் விழும்

மழையைப் போலவே


எதிர்பாரா தருணத்தில்

தானாகவே

கட்டிக் கொள்வாள்

கழுத்தை


ஈரம் பிசுக்கும் 

வாயால்

முகமெங்கும்

முத்தாடுவாள்


ஆம்..


அவள் என்

பெரும் மழை..


பேரின்ப மழையும்

அவளே !! 💕💕



Monday, 15 March 2021

மருதாணி திருவிழா

 ஐப்பசி மாசத்துல

அப்பி பிடிக்கும் என்ற

அப்பத்தாவின் வார்த்தைகள்

மனதில் எதிரொலியாய்


வாய்ல வச்சா

விசமாம்டி என்று

தோழிகளோடு

அளவாடியபடியே

அம்மியில் அரைபட்டது 

இலைகளோடு

கொட்டைபாக்கும் புளியும்


அவசரகதியில் முடிக்கப்பட்ட

இரவு உணவில் பசி மறைய


முற்றத்தில் அமர்ந்தபடியே

வரிசையாக

நீட்டப்பட்ட கரங்களில்

அம்மா வார்த்தாள்

குட்டி மருதாணி தோசை 


எப்பொழுது விடியும்

என எதிர்பார்ப்போடு

எப்பொழுது தூங்கினோம் 

என அறியாத

இரவின் முடிவில்


தலையணையில்

கொஞ்சம்

தலையில்

கொஞ்சம்

தள்ளியிருந்த தங்கையின்மேல்

கொஞ்சம் போக

மீதியிருந்த காய்ந்த மருதாணி

சிவப்பேறிய கரங்களில்

பார்த்ததுமே 

அப்படியொரு பரவசமும்


அவளைவிட எனக்கு தான்

செவந்திருக்கு

என மனதில் பெருமிதமாய்...


இப்படியாக

அரங்கேறியது

ஒரு மருதாணி திருவிழா 💕




Friday, 5 March 2021

அது ஒரு அழகிய பயணக் காலம் !!

பரபரவென அடித்து

கூந்தலைக் கலைத்து

முகத்தில் பரப்பிவிட்டுச்

செல்லும் காற்று


விரல்களும் பாதங்களும்

தனையறியாமலே

தாளம்போட வைக்கும்

ஸ்பீக்கரில் கசியும் பாடல்கள்


முன்பின் அறியாத மழலை

தாயின் தோளிலிருந்து

எட்டிப்பார்த்துச்

சிரிக்கும் சிநேகப் புன்னகை


அருகிலிருக்கும் ஊர்க்காரரோடு

சப்தமாய் பேசும்

கொண்டைமுடிந்த ஆச்சி 


கூடையிலிருக்கும் வெள்ளரிக்காவை

விற்றுவிட வேண்டுமென

கூவிக் கொண்டே ஏறியிறங்கும்

பேருந்து நிறுத்த வியாபாரி 


என பலவித காட்சிகள்

கொஞ்சம் கொஞ்சமாக

மனதை இலகுவாக்கியபடியே..


எத்தனையோவித குரல்கள்

எத்தனையோவித சப்தங்கள்..

எத்தனையோவித  முகபாவங்களோடு மனிதர்கள்

எத்தனையோவித நிறுத்தங்கள்..


எல்லாவற்றையும்

நினைவடுக்கின் அடிப்பேழையிலிருந்து

மென்மையாக

புரட்டிக் கொண்டிருக்கிறேன்..


பூட்டப்பட்ட ஏசி காருக்குள்

இருவர் மட்டும்

மௌனமாய் பயணித்த

ஒரு பயணப்பொழுதில்.. 💕




Sunday, 24 January 2021

அழகிய டைப்போகிராபி

குழந்தையாய் 

கொஞ்சித் திரியும்

அவள்தான்

சமயங்களில்

குரங்காகவும்

மாறுவாள்..


இஃது 

அவள் தவறல்ல..

இயல்பே!!


தவறென்றால்

மன்னியுங்கள் என

மன்றாடலாம்..


இயல்பென்பதால்

வேறு வழியில்லை

ஏற்றுக் கொள்ளுங்கள்..


ஏனெனில்...


கடவுள்

உங்கள் தலையில்

அழகாக கிறுக்கிய

டைப்போகிராபி

அவள் 💕👻


#அவள்_அப்படித்தான் 



Friday, 27 November 2020

இவளின் காதல் 💕

 இப்படித்தான் 

எனது காதலை

சொல்லத் தெரிகிறது..


கடந்து செல்லும் பொழுது

செல்ல இடிஇடித்தும்


தூங்கும் பொழுது

மீசையை பிடித்திழுத்தும்


சாப்பிடும் பொழுது

விரல்கடித்து கவளம் வாங்கியும்


வீட்டுக்குள் வரும் நேரம்

கதவுபின் ஒளிந்து

கண்ணாமூச்சி காட்டியும்


என் காதலை வெளிப்படுத்துகிறேன்..


சிறுபிள்ளைத்தனமாய்

இருந்தாலும்

என் பெரும் காதல் இது 💕💕




Tuesday, 3 November 2020

மெல்லிதயம் அறிவாயா ?

தீராக் காதலில் 

திளைத்துக்

கொண்டிருக்கிறாய்..


இருந்து கொள்..


ஆனால்.......


பலமாய்

பற்றிக் கொண்டிருக்கும்

உன் பேரன்பின்

இறுக்கமான

பிடிதனில்


தன் வர்ணம் இழந்து


பலம் இழந்து


விரக்தியடைந்து


மெல்லச் சாகும்

பட்டாம்பூச்சியை


ஏதேனும் 

எறும்புகள் 

இழுத்துச் செல்லும்

பொழுதாவது 

அறிந்து கொள்வாயா ?? 


மென்மையான 

பட்டாம்பூச்சிக்கும்

மெல்லிதயம்

உண்டென்று.. !??




Monday, 26 October 2020

மனமே... எனைத் தேடாதே !!

நான் எங்கே என

எனைத் தேடும் மனமே

இனி

எனைத் தேடாதே..


உருகி கரைந்து 

மறைந்து தொலைந்து

கொண்டிருக்கிறேன்

அவன் பிரியம்

என்னும் தணலில்...

எனைத் தேடாதே மனமே..


ஆம்..


கொஞ்சம் கொஞ்சமாக

ஆட்கொண்டு

எனை உருக்கித் தீர்க்கிறது

மொத்தமாய்

அவன் பிரியமெனும்

தணல்..


ஆனாலும்..


இத்தணலின் ஸ்பரிசம்

விநோதமானதே!!


பூவிதழில் தங்கும்

மழைத்துளியானது

சற்றே

சிதறித் தெளித்து

சிலிர்த்திட செய்யும்

குளுமையோடு

ஆக்கிரமிக்கும்

பிரியத்தின் தணல் 

இது ..


இன்னும் இன்னும் 

என

இன்னும் கொஞ்சம்

உருகிக் கொள்கிறேன்..


ஆகையால்...

என் மனமே

நீ ஓய்வெடு..

எனைத் தேடாதே  💕💕



Thursday, 17 September 2020

சபிக்கப்பட்ட சாபம்

கண்ணீரோடு விடும்

சாபம் பலிக்குமாம்..


யார் சொன்னது ?


கைம்பெண்ணாய் மாறிய

பெண்களின் கண்ணீரிலும்


அநாதையாய் திரியும்

பிள்ளைகளின் கண்ணீரிலும்


செழித்தோங்கி 


கோடிகளில் புரள்கிறது

டாஸ்மாக் வியாபரம் 




காதலித்துப் பார் 💕

 காதலித்துப் பார்..

 

கனவுகள் அதிகமாகும்..


புன்னகை முகமாகும்..


சந்தோசம் இரட்டிப்பாகும்..


நடப்பதே மிதப்பதாகும்..


உரிமைகள் கூடும்..


எதிர்பார்ப்புகள் எகிரும்..


கோபங்கள் பிறக்கும்..


சண்டைகள் நிகழும்..


இம்சைகள் இம்சிக்கும்..


சிங்கிளாய் இருக்க மனம் ஏங்கும்..


காதலித்துப்பார் 💕💕




Tuesday, 7 July 2020

என் சிநேகிதனே !

சிலந்தி
வலையத்தனை போல
மெல்லிய நூலளவு
இடைவெளி கோடு
நமக்கிடையே..

அது
அப்படியே இருக்கட்டும்..

இப்பொழுதோ
எவ்வித தயக்கமின்றி
உன்னுடன்
எல்லாவற்றையும் பகிர்கிறேன்..

அது இல்லையெனில்
நமக்கிடையே
உருவமில்லா சுவர்
எழுப்பப்படும்..

ஏகமான எதிர்பார்ப்புகளால்
காரணமின்றி காயங்கள்
நிகழக்கூடும்..

அம்மாயவலை
எந்த நொடியும்
அறுந்து விட
கூடாதென்பதுவே
என் பிரார்த்தனை..

சாத்தியமாகாது
என தெரிந்தும்
சண்டித்தனம்
செய்யும் மனதிற்கு
கடிவாளமிட்டுக் கொள்..

அதுதான் எப்பொழுதும்
ஆகச்சிறந்தது..

உன்னையும்
இழக்க விரும்பவில்லை
என் சிநேகிதனே!! 💕




Monday, 8 June 2020

அவளும் ஆழி தான் 💕

அவளும் ஆழி தான்... 💕💕

அமைதியாய் திரியும்
அவளின் ஆழ்மன தத்தளிப்பை
அவளின்றி யாரும்
அவ்வளவு எளிதில் அறிவதில்லை..

எத்தனை எத்தனை
கஷ்டங்களையும்
தனக்குள்
உள்ளிழுத்துக் கொள்வாள்
கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல்...

எத்தனை சூறாவளி புயல் போராட்டங்கள் வந்து
கொந்தளிக்க வைத்தாலும்
அவ்வளவு எளிதில்
அவள் தனக்கான எல்லையை
தாண்ட மாட்டாள்..

அப்படி தாண்டினால் என்றால்
நிச்சயம் பேரழிவு தான்
அவளைச் நிச்சலனப்படுத்திய  அத்தனைபேருக்கும்

ஆனால்...

அவளை அறிந்தவர்களுக்கு
அவள் ஒரு ஆழக்கிடக்கும்  பொக்கிஷம்

அவள் ஒரு மறைந்திருக்கும் புதையல்

அவள் ஒரு தனித்துவ எழில் ஓவியம்

அவள் ஒரு ரசனைமிக்க அழகுக்காரி

அவள் ஒரு அழியாத பாசக்காரி

ஏனெனில்
அவளும் ஆழி தான் 💕💕